Skip to content

மே மாதத்தில் நடத்த வேண்டிய, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவும், 450 உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இதுவரை,கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

உத்தரவுகள் : பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 450 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும், காத்தாடுகின்றன.
தொடக்க கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பாதிப்பு : ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வையோ, மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வையோ, இதுவரை நடத்தவில்லை. பட்டதாரி ஆசிரியர், பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தவில்லை. நடப்பு கல்வி ஆண்டு, இறுதி கட்டத்தை எட்டும் நிலையில், இன்னும், பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தாததும், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததும், ஆசிரியர் மட்டுமில்லாமல் மாணவர்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பொதுத்தேர்வை எழுதும், மாணவ, மாணவியர் விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது; இதர பல்வேறு பணிகள் உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாததால், பணிகள் தேங்கி கிடக்கின்றன. இதை மனதில் கொண்டு, தலைமை ஆசிரியர் பணியிடங்களை, விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பதவி உயர்வு : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரைமண்ட் பேட்ரிக் கூறுகையில், இரட்டை பட்டங்களை பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டும், பதவி உயர்வு அளிக்கும் விவகாரம், கோர்ட்டில் உள்ளது. இரட்டை பட்டங்களை பெற்ற ஆசிரியர்களில், ஆங்கில ஆசிரியர் தான் உள்ளனர். எனவே, ஆங்கில பாட ஆசிரியரை தவிர்த்து, இதர பாட ஆசிரியர்களுக்காவது, பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, அதிகாரிகள் முன்வர வேண்டும், என்றார்.


கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், ஆசிரியர் காலி பணியிடங்களால், மாணவர் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான், தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதவி உயர்வு கலந்தாய்வு, விரைவில் நடத்தப்படும் என, தெரிவித்தன.