Skip to content

பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு.

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அடுத்த சில நாட்களில், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இந்த காலத்தில், பெரும்பாலும், மின் கசிவால் உயிரிழப்புகள் ஏற்படும்.
இது போன்ற பாதிப்புகளை தடுக்க, பள்ளிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதன் விபரம்:
● அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கட்டட மின் இணைப்பை சரிபார்க்க வேண்டும். புவி ஈர்ப்பு கம்பிகள், செயல்பாட்டில் உள்ளதா என, சோதனை செய்ய வேண்டும்

● சுவிட்சுகள், மின் விசிறி, கணினி, ஆய்வக மின் கருவிகள் போன்றவற்றில், மின் இணைப்பு சரியாக உள்ளதாக என, சோதிக்க வேண்டும். பள்ளி கட்டடத்துக்குள் செல்லும், மின் கேபிள்களில் சேதம் ஏற்பட்டு, மின் கசிவு ஏற்படுகிறதா என, ஆய்வு செய்ய வேண்டும்

● மின் கம்பத்திலிருந்து, பள்ளி கட்டடத்துக்கு, மின் வினியோகம் செய்யப்படும் குறைந்த மின்னழுத்த கம்பிகளில் சேதம் உள்ளதா, அவற்றில் மரங்கள் உரசுகிறதா என்பதை, மின் வாரிய ஊழியர்கள் வாயிலாக ஆய்வு செய்து, முன்கூட்டியே சரி செய்ய வேண்டும்