Skip to content

அழகை அள்ளித்தரும் பழங்கள்!

பழங்கள் மூலம் பெறும் அழகு, ஆரோக்கியமானது. நிரந்தரமானது. எந்தெந்த பழங்களை அழகுக்காக எப்படி பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?

ஆப்பிள்: இது, சருமத்திற்கு பொலிவு தரும் ”ஸ்கின் டோனர்”. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.

மாம்பழம்: எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின்- ”ஏ”, ”சி” போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தர வல்லன. நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூச வேண்டும். சருமத்தின் சுருக்கங்களையும் இது போக்கும்.

ஆரஞ்சு: வைட்டமின் ”சி” நிறைந்திருக்கும் பழம் இது. இரண்டாக வெட்டி ஒரு பகுதியால் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் சருமம் பிரஷ் ஆகிவிடும். பழத்தோலால் நகங்களை தேய்த்தால், அதில் இருக்கும் கறை நீங்கும். தோலை வெயிலில் காயவைத்து தூளாக்கி, பாதுகாத்திடுங்கள். அதில் முல்தானிமெட்டியும், தண்ணீரும் கலந்து குழைத்து முகத்தில் ”பேக்” செய்யலாம். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவிவிட்டால் முகம் பளிச்சிடும்.

நேந்திரன் பழம்: பழத்தின் உள்ளே இருக்கும் கறுப்பு போன்ற புள்ளி விதைகளை நீக்கிவிட்டு கூழாக்கி முகத்தில் பூசவேண்டும். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். பழத்தில் இருக்கும் பொட்டாசியம், சருமத்திற்கு புத்துணர்ச்சியை தரும்.

திராட்சை: எண்ணெய்த்தன்மை கொண்ட, அடிக்கடி பருக்கள் வரும் முகத்திற்கு ஏற்றது. தினமும் திராட்சை சாறு பூசி, 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.

மாதுளை: சுருக்கத்தையும், கறுப்பு படையையும் போக்கும் தன்மைகொண்டது. மாதுளையை அரைத்து முகத்தில் பூசி, கழுவிவிட்டால் முகமும் மாதுளைபோல் பளிச்சிடும். செயலிழந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.

பப்பாளி: பப்பாளி பழ கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினுமினுப்பும் கிடைக்கும். பப்பாளி கூழ், ஓட்ஸ், தேன் போன்றவைகளை கலந்து ”பேஸ்பேக்”காக பயன்படுத்தலாம்.