Skip to content

வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் நியமனம் :நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, இரண்டாண்டுகளுக்கு முன், தேர்வு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு நீதிமன்ற வழக்குகளால், அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன், பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து, 313 முதுநிலை பட்டதாரிகளுக்கு, வேதியியல் ஆசிரியர் பணிக்கான பணி நியமன உத்தரவு, நேற்று வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிய ஆசிரியர்கள், நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.