ஜன.30: சிவகங்கையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ரூர்பன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் 31.01.2021 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் பணியினை தேர்வு செய்து கொள்ளலாம். தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை, தொழில்நுட்ப தகுதி, முன் அனுபவம், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட புகைப்பட நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.