Skip to content

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆனந்தக் கண்ணீர் :

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

நேற்று துவங்கிய, முதல் நாள் கவுன்சிலிங்கில், விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்து, மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதற்கு காரணமான, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நன்றி தெரிவித்தனர். 'பல தடைகளை கடந்து, இந்த உள் ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்திருப்பதாலும், அதன் வாயிலாக, ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி இருப்பதாலும், இது மறக்க முடியாத நாள்' 

இந்த கல்வியாண்டு முதல், மருத்துவ படிப்பில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேருவதற்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அரசால் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, கவுன்சிலிங் துவக்கமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நேற்று துவங்கியது; நாளை முடிகிறது.இதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 313எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 92 பி.டி.எஸ்., இடங்கள்என, 405 இடங்கள், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.முதல் நாளான நேற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில், அறிவிக்கப்பட்ட தர வரிசையின்படி, 267 மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கையை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இவர்களில், அர்ச்சனா என்ற மாணவிக்கு, அவரே வெள்ளை நிற அங்கியையும், ஸ்டெதஸ்கோப்பையும் கையில் கொடுத்து அணிய செய்தார். அப்போது, ஆனந்த கண்ணீர் வடித்த மாணவர்களும், பெற்றோரும், முதல்வர்இ.பி.எஸ்., காலில் விழுந்து, நன்றி தெரிவித்தனர்.தொடர்ந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை உறுதி செய்த, அரசு பள்ளி மாணவர்களுடன், முதல்வர் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, மாணவர்கள், '7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி' என்ற, வாசகங்கள் எழுதப்பட்ட பலுான்களை பறக்க விட்டனர்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:இந்த நாள், என் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான, மறக்க முடியாத நாள். தமிழக வரலாற்றில், ஒரு பொன்னான நாள். அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில், திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள். 


அரசு பள்ளியில் படித்தேன் என்ற முறையில், எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்திய திருநாள்.இது, ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்பதில் எனக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நாள்.இந்த அரசு, 'நீட்' தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.


தமிழகத்தில், பிளஸ் 2 படிப்பவர்களில், 41 சதவீத மாணவர்கள், அரசு பள்ளிகளில் படிப்பவர்கள். கடந்தாண்டில், ஆறு மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் தேர்வாகினர். இந்நிலையை மாற்ற, நான் உறுதியாக இருந்தேன்.அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ கனவு லட்சியத்தை நிறைவேற்ற முடிவு செய்து, பல தடைகளை தாண்டி, சட்டத்தை கொண்டு வந்து, ஏழை, எளிய மாணவர்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. 



இதுவரை, உங்களது குடும்பம், எவ்வாறாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இனிமேல், 'மருத்துவர் குடும்பம்' என்றே, அடையாளம் காணப்படும்.

மேலும், இம்மாணவர்களின் ஏழ்மை நிலைமை கருதி, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படாதவாறு, ‛போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவி தொகை மற்றும் இதர உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வாயிலாக இடம் கிடைப்பதற்கு, எதிர்க்கட்சியும் குரல் கொடுக்கவில்லை; மக்களும் கருத்து தெரிவிக்கவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும், 41 சதவீதம் மாணவர்களில், ஆறு பேர் தான் மருத்துவ படிப்பில் இடம் பெற்றனர் என்பதால், அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் என்ற அடிப்படையில், இந்த சட்டத்தை கொண்டு வந்தோம்.

ஏழைகளுக்கும், மருத்துவ கல்வி கிடைக்கக்கூடிய வசதியை, இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். அவர்களுக்கு தேவையான உதவியை தொடர்ந்து செய்யும். கிராமம் முதல் நகரம் வரை, ஏழைகள் நிறைந்த பகுதியில், நல்ல தரமான மருத்துவ சிகிச்சை செய்ய, இப்படிப்பட்ட மாணவர்களை, அரசு ஊக்குவிக்கும். ஏழ்மையை உணர்ந்தவர்கள் என்பதால், அர்ப்பணிப்புடன், கிராமப்புறங்களிலும் மருத்துவ சேவையை, இம்மாணவர்கள் செய்வர்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.