Skip to content

மாநில யோகாசனப் போட்டியில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு....



ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.22: யுனைடெட் யோகா விளையாட்டு சங்கம், பிலாஸ்டிக் பைகள் உபயோகிப்பதைத் தவிர்பதற்கான விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதற்காக மாநில அளவில் நடத்திய யோகாசனப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவி அ.கனிதா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.



போட்டிகள் விருதுநகர், கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. போட்டியில் மாநிலம்முழுவதும் இருந்தும் பல மெட்ரிக்குலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 1800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள, படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும் ஏ.கனிதா என்ற மாணவி கலந்து கொண்டார். இவர் 5 ம் வகுப்பு மாணவிகளுக்கான போட்டியில் யோகநித்திரை ஆசனத்தை மிக நேர்த்தியாக செய்து முதலிடம் பெற்றார்.
இவர் படிக்கும் இந்தப் பள்ளிக்கு தலை்மை ஆசிரியராக கோ.ஜெயக்குமார் ஞானராஜ் என்பவர் ஜூன் மாதம் இரண்டாம் வாரம் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ளார். தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு வாரம் இரு முறை ஜூலை மாதம் முதல் யோகாசன வகுப்பு எடுக்க ஏற்பாடு செய்துள்ளார். மொத்தம் 10 வகுப்புகளிலே பயிற்சி பெற்ற இந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் முதலிடம் பெற்று அரசுப் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி கனிதாவிற்கு பாராட்டு விழா  பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கா.மாரீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியை கா.ரோஸ்லினா வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், மாணவி கனிதாவிற்கு சான்றிதழ், கோப்பை மற்றும் சிறப்புப் பரிசினை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
மாணவியின் தாய் அ.ராமலட்சுமி நன்றி கூறினார்.